Top posting users this month
No user |
Similar topics
விவேகானந்தர் - (2) - பரணிபாலன்
Page 1 of 1
விவேகானந்தர் - (2) - பரணிபாலன்
விஸ்வநாதரை தரிசித்து விட்டு, அவள் ஊர் திரும்பி விட்டாள்.
மனைவியை யாரோ ஒருத்தியாக நினைத்து, கண்டுகொள்ளாமல் போன துர்காசரணரும் எங்கெங்கோ அலைந்து,விதிவசமாக கல்கத்தாவுக்கே வந்து சேர்ந்தார். ஆனால் வீட்டுக்குப் போகவில்லை. தன் நண்பரின் வீட்டுக்குச் சென்றார்.
பழைய நண்பர், தன் வீட்டுக்கு வந்த செய்தியை, துர்காசரணரின் வீட்டுக்கு சொல்லி அனுப்பினார் அந்த நண்பர். அவ்வளவு தான். உறவுக்காரர்கள் குவிந்துவிட்டனர்.
""துர்கா! நீர் இப்படி செய்தது முறையா? உம் மனைவியை பிரிய எப்படி மனம் வந்தது? மனைவி கிடக்கட்டும்.
கைக்குழந்தையான விஸ்வநாதனுமா உம்மனதை விட்டு அகன்று விட்டான்?'' என்று அர்ச்சனை செய்தனர்.
துர்காசரணர் எதற்கும் பதில் சொல்லவில்லை. அமைதியாக இருந்தார். உறவினர்கள் அவரைக் குண்டுக்கட்டாகத் தூக்கி ஒரு வண்டியில் வீட்டுக்குக் கூட்டிச் சென்றுவிட்டனர். சரணரின் மனைவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆனால்,
துர்காசரணரோ மவுனமாகவே இருந்தார். குழந்தையைக் கையால் கூடத் தொடவில்லை. மனைவியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
உறவினர்கள் ஆலோசித்தனர்.
""இப்படி செய்தால் இவர் சரிப்பட்டு வரமாட்டார். இவரை ஒரு அறையில் அடைத்து விடுவோம். இல்லாவிட்டால், இவர் திரும்பவும் காசி, ராமேஸ்வரம் என
ஓடிவிடுவார்'' என்று முடிவெடுத்து, அறையிலும் அடைத்துவிட்டனர்.
உள்ளே சென்ற துர்காசரணர் உண்ணாவிரதம் ஆரம்பித்து விட்டார். மூன்று நாட்களாக பச்சைத்தண்ணீர் கூட பல்லில் படவில்லை. சரணரின்
மனைவிக்கு பயமாகிவிட்டது.
உறவினர்களை அழைத்து,""என் மீது அன்பு கொண்டு நீங்கள் செய்த காரியத்திற்கு நன்றி, ஆனால், இப்படியே போனால் என் மாங்கல்யத்தையே இழந்துவிடுவேன் போலிருக்கிறதே! அவர் எங்கு வேண்டுமானாலும் போகட்டும். அவர் உயிருடன் இருந்தால் அதுவே போதும். அவரை விட்டு விடுங்கள்,'' என்றாள். உறவினர்களுக்கும் அது சரியென்று படவே, அறைக்கதவை திறந்துவிட்டனர். அப்போதும் அவர் எதுவும் பேசவில்லை. கூண்டில் இருந்து விடுபட்ட பறவை போல சென்றவர் தான். அதன்பிறகு அவர் எங்கு போனார் என்பதை அவரது மனைவியோ, உறவினர்களோ தாங்கள் இறுதிக்காலம் வரை தெரிந்து கொள்ளவே முடியவில்லை.
இப்படி விஸ்வநாதன், தந்தை முகம் பார்த்தறியாமலே வளர்ந்து விட்டார். அவருக்கும்
புவனேஸ்வரிக்கும் திருமணமும் நடந்து முடிந்துவிட்டது.
விஸ்வநாதன்- புவனேஸ்வரி தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.
புவனேஸ்வரி அம்மையாருக்கு ஒரே ஒரு மனக்குறை. இந்த
உலகில் சாதாரணமாக எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் குறை தான் அது.
""காசி விஸ்வநாதா! இரண்டு பெண்களைக் கொடுத்தாய். ஏன் ஒரு ஆண் குழந்தையைத் தர மறுக்கிறாய்?'' அவள் காசிநாதனை வேண்டிக் கொண்டே இருந்தாள்.
காசிக்கு போய், விஸ்வநாதர் சன்னதியில் நின்று நேரடியாக வேண்டிக்கொள்ள அவளுக்கு ஆசை தான். ஆனால், கணவர், குழந்தைகளை விட்டுச்சென்றால் கவனித்துக் கொள்ள சரியான ஆள் வேண்டும். மேலும், "பெண் குழந்தைகள் போதாதா?' என அவர் சொல்லிவிட்டால் என்ன செய்வது?
எனினும், அக்காலத்தில்
காசிக்குச் செல்ல முடியாதவர்கள், அங்கேயே குடியிருப்பவர்களைக் கொண்டு, சில நேர்ச்சைகளைச் செய்வது வழக்கம். புவனேஸ்வரி யின் அத்தை வீடு காசியில் இருந்தது. அந்த அத்தைக்கு தகவல் சொல்லி, அவர் மூலமாக விஸ்வநாதருக்கு நேர்ச்சைகளைச் செய்தாள் புவனேஸ்வரி.
ஒரு நாள், புவனேஸ்வரியின் கனவில் அதிபிரகாசமான ஒளி வெள்ளம் தோன்றியது. பரமேஸ்வரன் தியான நிலையில் தோன்றினார். அதே நிலையில், ஒரு குழந்தையாக உருமாறினார். புவனேஸ்வரியின் உடலில் அந்த ஒளி பாய்வது போல் இருந்தது. அவள் திடுக்கிட்டு விழித்தாள்.
இந்த கனவு கண்டபிறகு சிலநாட்களிலேயே அவள் கர்ப்பவதி யாகிவிட்டாள். மகிழ்ச்சியின் உச்சத்தில் அவள் இருந்தாள். நிச்சயமாக, அந்த பரமசிவனே தன் வயிற்றில் பிறப்பான் என நம்பினாள். ""விஸ்வநாதா! பரமேஸ்வரனே! இம்முறை உன்னிடம் நான் விண்ணப்பித்திருப்பது ஆண் குழந்தைக்காக! அதை மறந்துவிடாதே,'' என தினமும் தியானம் செய்தாள்.
அவளது கோரிக்கை நிறைவேறியது. சூரியபகவான் மகரராசியில் என்று நுழைகிறாரோ, அன்று அவரது பிரகாசம் அதிபயங்கரமாக இருக்கும். அந்த நாளை வடநாட்டவர் "மகர சங்கராந்தி' என்றும், தென்நாட்டவர் "பொங்கல்' என்றும் கொண்டாடுவர். மகரராசியில் பிறந்தவர்கள் எந்த விலை கொடுத்தேனும், என்ன செய்தேனும், நினைத்ததை சாதித்துக் காட்டுவார்கள் என்றும் சொல்வதுண்டு. இப்படி மகரத்திற்கு முக்கியத்துவம் தரும் அந்த இனிய நாளில், புவனேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
""சிவசிவா! உன் அடியாளான என் பிரார்த்தனையை ஏற்று, தயவு செய்து எனக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொடு,'' என்று பிரார்த்தித்தபடியே வலியைத் தாங்கிக்
கொண்டாள் அந்தத்தாய்.
அன்று 1863, ஜனவரி 12 திங்கள் கிழமை. சிவனுக்குரிய கிழமை திங்கள். புவனேஸ்வரியின் பிரார்த்தனை பலித்தது. கூனிக் கிடந்த உலகத்தின் முதுகெலும்பை நிமிர வைக்க அவதரித்து விட்டார் அந்த மகான். ஆம்....விவேகானந்தர் பிறந்துவிட்டார்.
குழந்தையைப் பார்க்க உறவினர்கள் புவனேஸ்வரியின் வீட்டில் குவிந்து விட்டார்கள்.
""இவன் அவனுடைய தாத்தா துர்காசரணரைப் போலவே இருக்கிறான்,'' என்று தான் பெரும்பாலோனோர் சொன்னார்கள். இல்லறத்திற்கு பிறகும் துறவறம் பூண்ட அந்த தாத்தாவையும் தாண்டி, இல்லறத்துக்குள்ளேயே நுழையாமல், உலகின் ஆன்மிகப்புரட்சியை ஏற்படுத்தப் போகும் வீரத்துறவியல்லவா அவர்!
குழந்தைக்கு பெயர் சூட்ட ஏற்பாடுகள் நடந்தன. குடும்பத்தார் அவனுக்கு தங்கள் குலப்பெயரான "தத்தா'வையும் சேர்த்து, "நரேந்திரநாத் தத்தா' என பெயர் வைக்க வேண்டும் என்றனர். புவனேஸ்வரிக்கு அந்தப்பெயரில் விருப்பமில்லை.
""இவன் காசி விஸ்வநாதரின் அருளால் பிறந்தவன். அதனால் "விஸ்வநாதன்' என்ற பெயர் தான் பொருத்தம். ஆனாலும், என் கணவரின் பெயரும் அதுவாகவே இருப்பதால், அதேபெயரில் அவனை அழைப்பது மரியாதையாக இருக்காது. அதனால், அவனுக்கு நான் வேறு பெயர் வைக்கப்போகிறேன்,'' என்று சொல்லி, அதே பெயரால் குழந்தையை அழைக்கவும் ஆரம்பித்துவிட்டாள்.
ஆனால், குடும்பத்தார் அதை ஏற்கவில்லை. -தொடரும்
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum