Top posting users this month
No user |
பகவான் சத்ய சாய்பாபா (பகுதி-06)
Page 1 of 1
பகவான் சத்ய சாய்பாபா (பகுதி-06)
சத்யசாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு பரவசத்தை தரக்கூடியது. இளமை முதலே அவர் பல அற்புதங்களைச் செய்தார். ஏன், அவரது பிறப்பே கூட, நம்மை மிகவும் அதிசயப்படுத்தும்.
புற்றூர்...இந்த ஊருக்கு இப்படி ஒரு பெயர் வரக் காரணம் என்ன? ஒரு காலத்தில், அந்த கிராமத்தில் இருந்த பசுக்கள் பால் கறக்க மறுத்தன. குழந்தைகள் பாலின்றி சிரமப்பட்டனர். புதிதாக பசுக்களை வாங்கினால், அவை நோய்கண்டு இறந்தன.ஊரெங்கும் ஒரே பாம்பு புற்றாகக் காட்சியளித்தது. எப்போதும், இல்லாத
வகையில் திடீரென புற்றுகள் தோன்றக் காரணம் என்ன என்ற விசாரணை ஆரம்பமானது. அவ்வூரில் பசுக்களை மேய்ப்பவனிடம் மக்கள் விசாரித்தனர். அவன் சொன்ன விஷயம் அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் ஒருமுறை வழக்கம் போல் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தான். ஒரு குறிப்பிட்ட பசு மட்டும் மேய்ந்து விட்டு திரும்பும் போது, மடி சுருங்கிப் போயிருந்தது. பாலே இல்லை. காலை முதல் மதியம் வரை, தன் கண் முன்னால் மேய்ந்துவிட்டு, பருத்த மடியுடன் சென்ற இந்தப் பசுவிற்கு, மாலையானதும் மடி சுருங்கக்காரணம் என்ன என்று புரியவில்லை. மாட்டின் சொந்தக்காரர் கேட்டால் பதில் சொல்லிஆக வேண்டுமென்ற பயம்.யாராவது, குறிப்பிட்ட அந்த மாட்டின் பாலைக் கறந்து விடுகிறார்களோ என சந்தேகம்! அவன் அந்த மாட்டைக் கண்காணிக்க ஆரம்பித்தான். ஒருநாள் மாட்டின் பின்னாலேயே சென்றான். அந்தமாடு ஒரு புற்றின் அருகில் போய் நின்றது. புற்றிலிருந்து ஒரு நாகப்பாம்பு வெளியே வந்தது. அந்தப் பாம்புக்கு குழந்தையின் முகம் இருந்தது. அது பசுவிடம் பால் குடிக்க ஆரம்பித்தது. மேய்ப்பவனுக்கு வந்தது கோபம்!
அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்தான். அதன் தலையில் வீசி எறிந்தான். வலி தாளாமல் துடித்த பாம்புகோபத்துடன்பேச ஆரம்பித்தது.""என்னைக் கொன்ற இந்த ஊரில் இனி எந்த மாடும் பால் கறக்காது. இந்த ஊரெல்லாம் பாம்பு புற்றாகி மக்களைப் பயமுறுத்தும். யாரும் நிம்மதியாகத் தூங்க முடியாது. இந்த ஊரின் பெயரே இனி "புற்றூர்' என மாறும். பசு வளர்ப்போர் இனி நஷ்டமடைவர்,'' என்று சாபமிட்டு விட்டு இறந்து போனது.அன்று முதல் இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டதாக பசு மேய்ப்பவன் தெரிவித்தான். மக்கள் மிகவும் வருத்தப்பட்டனர். இந்த நிலைமை மாறாவிட்டால், ஊரையே காலி செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைமை ஏற்பட்டது. அந்த ஊரின் நிஜப்பெயர் கொல்லபள்ளி. ஆனால், பசுக்கள் அதிகமாக இருந்ததால் மக்கள் செல்லமாக தங்கள் ஊரை பகவான் கிருஷ்ணர் வளர்ந்த இடத்துக்குச் சமமாகக் கருதி, "ஆயர்பாடி' என்றே அழைத்தனர். செல்வச்செழிப்பு மிக்க அவ்வூர், வாடி வதங்கிப்போனதால் மக்கள் வாழ்வதற்கே சிரமப்பட்டனர். ஏழ்மை தாண்டவமாடியது.இவ்வளவு சிரமங்களுக்கு இடையிலும், அவ்வூரில் ஒரே ஒரு குடும்பம் மட்டும் புகழோடு விளங்கியது. ராஜு வம்சத்தாரின் ஆளுகைக்கு உட்பட்டு அப்பகுதி அமைந்திருந்தது. அந்த வம்சத்தில் ஒரு காலத்தில் மிகப்பெரிய அறிஞராகவும், மகானாகவும் விளங்கியவர் வெங்காவ தூதர். அவரது வம்சாவழியில் வந்தவர் ரத்னாகர கொண்டம ராஜு. "நூறாண்டு காலம் வாழ்க' என்று எல்லாரையுமே வாழ்த்துவது மரபு. ஆனால், அத்தனை பேரும் நூறாண்டுகள் வாழ்வதில்லை. ஆனால், கொண்டம ராஜு நூறாண்டுகள் வாழ்ந்தார். இவர் எப்போதும் ராமாயணத்தைப் படித்துக் கொண்டிருப்பார். ராமாயணக் கதையை மக்களுக்கு கூறுவார். ராமாயணத்தில், எந்த இடத்தில் எந்த சந்தேகம் கேட்டாலும், கேள்வி கேட்டாலும் மிகச்சரியாகத் தயக்கமின்றி பதில் சொல்வார்.
அவருக்கு இரண்டு மகன்கள். அவர்களுக்கு தங்கள் குலவிளக்காக விளங்கிய வெங்காவ தூதரின் பெயரையே வைத்தார் கொண்டமராஜு. மூத்தமகன் பெத்த வெங்கப்ப ராஜு என்றும், இளைய மகன் சின்ன வெங்கப்ப ராஜு என்றும் அழைக்கப்பட்டனர்.
பெத்த வெங்கப்ப ராஜு வளர்ந்ததும் அவருக்கு ஈஸ்வரம்மா என்ற பெண்மணியைத் திருமணம் செய்து வைத்தனர். இவர்கள் இல்லறத்தை நல்லறமாக நடத்தி ஒரு ஆண்குழந்தையையும், இரண்டு பெண் குழந்தைகøளையும் பெற்றனர்.
மகனுக்கு சேஷமராஜு என்றும், மகள்களுக்கு வெங்கம்மா, பர்வதம்மா என்றும் பெயர் சூட்டப்பட்டது.
இனிமையாகக் கழிந்து கொண்டிருந்த அந்தக் குடும்பத்தின் வாழ்க்கையில் மேலும் இனிமை சேர்க்கும் விதத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
ஒருநாள், கொண்டமராஜுவின் மனைவி ஒரு கனவு கண்டார். அவரது கனவில் சத்யநாராயண சுவாமி தோன்றினார். ""அம்மா! நாளை உன் மருமகளின் உடலில் ஒரு வியக்கத்தக்க மாற்றம் ஏற்படும். அதுகண்டு பயப்பட வேண்டாம்,'' என்றார் சுவாமி. மறுநாள், மாமியார் தன் மருமகள் ஈஸ்வரம்மாவை அழைத்து, இந்த விபரத்தைச் சொன்னார். அன்று, ஈஸ்வரம்மா கிணற்றடியில் நின்று பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். தண்ணீர் இறைக்க ஆரம்பித்தார். அப்போது வானிலிருந்து சீறிப்பாய்ந்து வந்தது அந்த நீல நிற ஒளி. - தொடரும்
ஆனந்தம் எங்கே இருக்கிறது?
ஆனந்தத்தை எங்கே இருக்கிறது என்பதற்கு பதிலளிக்கிறார் சத்யசாய்பாபா. நீங்கள் அன்பிலேயே பிறந்தீர்கள். அன்பினாலேயே வளர்க்கப்பட்டீர்கள். உங்களை அன்பிலேயே ஐக்கியப்படுத்திக் கொள்ளுங்கள். சுயநலமில்லாமல் அனைவரிடமும் அன்பு காட்டி அரவணைக்கும் பண்பினை இயற்கையிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். அன்பையும், தியாகத்தையும் உங்களது பிராணனாகிய மூச்சுக்காற்றாக எண்ணுங்கள்.கோபம் வரும்போதும், மனம் அலைபாயும்போதும்,"" நான் ஒரு மனிதன்'' என்று உங்களுக்கு நீங்களே சொல்லிப் பழகுங்கள். எங்கே நம்பிக்கை இருக்கிறதோ, அங்கே அன்பிருக்கிறது. எங்கே அன்பிருக்கிறதோ அங்கே அமைதியிருக்கிறது. எங்கே அமைதி இருக்கிறதோ, அங்கே சத்தியம் இருக்கிறது. எங்கே சத்தியம் இருக்கிறதோ, அங்கே கடவுள் இருக்கிறார். எங்கே கடவுள் இருக்கிறாரோ, அங்கே ஆனந்தம் நிறைகிறது.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum