Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஹரிணி என்கிற நியாயத்தின் சகோதரி

Go down

ஹரிணி என்கிற நியாயத்தின் சகோதரி Empty ஹரிணி என்கிற நியாயத்தின் சகோதரி

Post by oviya Sun Oct 18, 2015 1:29 pm

சென்ற மாத ஜெனிவா நிகழ்வுகளால் ஒருபுறம் மன நிறைவு, இன்னொருபுறம் மனக்குமுறல். மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசெய்ன் வெளியிட்ட அறிக்கை நம்பிக்கையை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்காவின் நம்பிக்கைத் துரோகம் அதை நாசமாக்கிவிட்டது.
எந்த அமெரிக்கா இப்படியொரு அறிக்கைக்கு அஸ்திவாரம் அமைத்ததோ, அதே அமெரிக்கா - கூட இருந்தே குழிபறித்தது கொடுமையிலும் கொடுமை.

அமெரிக்கா இல்லாவிட்டால் இந்த விசாரணை அறிக்கை சாத்தியமா - என்று கேட்கிற நண்பர்களுக்கு, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பதிலளித்துவிட்டது, எமது தமிழ்.

'நந்தவனத்தில் ஓர் ஆண்டி
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந்தானொரு தோண்டி
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி'

என்று எமது முன்னோர் எப்போதோ எழுதியது, அமெரிக்காவுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது.

இப்படியொரு நெருக்கடியான நிலையிலும், அடுத்து என்ன - என்கிற குழப்பமெல்லாம் இல்லாமல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் - உலகெங்கிலும் சிதறிக் கிடக்கிற எமது புலம்பெயர் உறவுகள்.

சென்றவாரம் ஜெர்மனி நாட்டில் நடந்த இரண்டு நிகழ்வுகள் அதைத் தெள்ளத்தெளிவாக உணர்த்தியிருக்கின்றன.

ஒரு நிகழ்வு, உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் நடத்திய ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு. இன்னொன்று, ஜெர்மானிய மாதரசி ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான நிகழ்வு.

முதல் நிகழ்வில் பங்கேற்ற மாவை சேனாதிராஜா, யோகேஸ்வரன் போன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், 'இன அழிப்பு' என்கிற வார்த்தையே அகராதியில் இல்லை என்பதைப்போல், பேசிச் சென்றனர். மறந்தும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.

கலந்துகொள்வது 'வாழ்வுரிமை மாநாடு' என்பதற்காகவாவது, இலங்கை அரசால் தமிழரின் வாழ்வுரிமை எப்படியெல்லாம் பறிக்கப்பட்டது என்பதைப் பேசியிருக்கவேண்டும்.

அதைப் பேசவுமில்லை... 'பாதிக்கப்பட்ட தாயகத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க, சர்வதேச விசாரணை அவசியம்' என்று வலியுறுத்தவும் இல்லை.

கூட்டத்தில் பங்கேற்ற, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த இளைஞர் திருச்செல்வம், கூட்டமைப்புத் தலைவர்களின் கள்ள மௌனத்தை நேரடியாகச் சாடியிருக்கிறார்.

'நடந்தது இன அழிப்பு - என்கிற உண்மையைச் சொல்லவே தயங்குவது ஏன்' என்று முகத்துக்கு நேராகவே கேட்டிருக்கிறார். தாயகத்தில் தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்தத் தடையாக இருக்காதீர்கள் - என்று வேண்டுகோளும் வைத்திருக்கிறார்.

தமிழின அழிப்புக்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும், தமிழின அழிப்புக்குப் பன்னாட்டு சுயாதீன விசாரணை கோருவதாகவும், சர்வதேசத்தின் கண்காணிப்பில் தாயகத்திலும் புலத்திலும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் - மாநாட்டுத் தீர்மானங்கள் இருக்க வேண்டியதன் அவசியத்தையும், கூட்டமைப்பின் தலைவர்கள் முன்னிலையில் விளக்கியிருக்கிறார் திருச்செல்வம்.

(ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தைத் தாண்டி, புலம்பெயர் தமிழர்கள் தமது இறுதி இலக்கை நோக்கி விழிப்புடன் செல்கிறோம் - என்று திருச்செல்வம் குறிப்பிட்டதன் பொருள் என்ன என்பதை, தாயகம் திரும்பியவுடன் சமந்தகர்களிடம் தெரிவிக்க வேண்டும் மாவை.)

இரண்டாவது நிகழ்வில், அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஜெர்மானிய மாது, இலங்கையில் தமிழர் - சிங்களர் என்று இரு இனத்தவரும் போரால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இரு தரப்புக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்றும் பொத்தாம் பொதுவாகப் போதித்திருக்கிறார்.

அவர் பேசியதிலிருந்த பிழையை, அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவையைச் சேர்ந்த சங்கர் உடனடியாகச் சுட்டிக் காட்டித் திருத்தியிருக்கிறார்.

போர் என்கிற பெயரால் நடத்தப்பட்டது திட்டமிட்ட இனப்படுகொலை - என்பதையும், கொன்று குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களுக்கு நீதி கூட மறுக்கப்படுவதையும் சங்கர் விலாவாரியாக விளக்கிய பிறகுதான், கூட்டத்துக்கு வந்திருந்த பார்வையாளர்களுக்குத் தெளிவு பிறந்தது.

சரியான நேரத்தில் குறுக்கிட்டு, தேவையான விளக்கத்தைக் கொடுத்தமைக்காக சங்கரைப் பாராட்டியவர்களில் பலரும் ஜெர்மானிய இனத்தைச் சேர்ந்தவர்கள்.

ஓர் இனம் திட்டமிட்டே அழிக்கப்பட்டிருக்கிறது, அந்த இன அழிப்புக்கு ஆயுதங்களைக் கொடுத்து உதவிய சர்வதேச நாட்டாண்மைகளால் அதற்கான நீதி பறிக்கப்பட்டிருக்கிறது.

இதை உணர்பவர்கள், இந்த இனத்தை மேலதிக அழிவிலிருந்து காக்கும் உறுதியோடும், நடந்த இனப்படுகொலைக்கு நீதி பெற்றே தீர்வோம் - என்கிற ஓர்மத்தோடும் சோர்வின்றிச் செயல்படுகிறார்கள்.

அவர்களின் குரல்தான், திருச்செல்வத்தின் குரல்.... அவர்களின் குரல்தான், சங்கரின் குரல்! பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான பிரதிநிதிகள், திருச்செல்வமும் சங்கரும் தானென்றால், உண்மைகளைப் பேசவே அஞ்சி நடுங்குகிற இந்த அரசியல்வாதிகள் யார்? இவர்கள் யாருடைய பிரதிநிதிகள்?

எம் இனத்துக்காக நீதி கேட்கும் எமது இளைஞர்களின் குரல்கள் வலுவடைந்து வருகிற நிலையில், சிங்களச் சகோதரி ஒருவரின் குரலும் நம்முடன் இணைந்து கொண்டிருக்கிறது.

பிரையன் போல், பாஷண அபயவர்தன போல், மென்டிஸ் போல் மனசாட்சியுடன் பேசியிருக்கிறார், சிறீலங்கா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரான ஹரிணி அமரசூரியா.

ஜெனிவா தீர்மானம் இலங்கைக்குக் கிடைத்திருக்கும் ராஜதந்திர வெற்றி - என்று ஜனாதிபதி மைத்திரிபால தரப்பிலும், நாட்டுக்கு இழைக்கப்பட்டிருக்கும் மாபெரும் துரோகம் - என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பிலும் செய்யப்பட்டு வரும் பிரச்சாரங்களில், அரசுத் தரப்புப் பிரச்சாரம் குறித்தே தான் கவலைப்படுவதாகக் கூறியிருக்கிறார் ஹரிணி.

எதிர்க் கட்சியினரின் நிலை எதிர்பார்த்ததுதான்.... அரசின் நிலைதான் கவலையளிக்கிறது' என்று காரண காரியத்தோடு விளக்கியிருக்கிறார் ஹரிணி. அவரது கருத்துக்கு லைக்ஸ் குவிகிறது.

அப்பட்டமான மனித உரிமை மீறல்களால், ஒட்டுமொத்த உலகும் ஒரு துஷ்டனைப் பார்ப்பதைப் போலத்தான் இலங்கையைப் பார்க்கிறது. இந்த மோசமான இமேஜை உடைக்க ஒரு துரும்பைக்கூட தூக்கிவைக்காத ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு, ஐ.நா. கூட்டம் முடிந்து திரும்பியபோது கொடுக்கப்பட்ட வரவேற்பு, ஹரிணி போன்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டின் இமேஜை மேம்படுத்த வேண்டியவர்கள், அதைச் செய்யாமல், அதற்கு நேர்மாறாக 'படையினரைப் பாதுகாத்திருப்பது நாங்கள் தான்' என்று சொல்லி தங்களுக்கென ஒரு இமேஜை ஏற்படுத்திக் கொள்ள முயல்வது அபத்தமானது என்கிறார்கள் அவர்கள்.

"பெரும்பான்மை சமூகத்திடமும் இராணுவத்திடமும் அரசு அடிபணிந்திருக்கிறது. குற்றமிழைத்த இராணுவத்தினருக்குத் தண்டனையிலிருந்து விதிவிலக்கு தர இந்த அரசும் முயல்கிறது.

போர்க் குற்றவாளிகளைக் கதாநாயகர்களாகப் போற்றத் தடையாக இருக்கப் போவதில்லை என்று வெளிப்படையாகவே அறிவிக்கிறது.....

குற்றஞ்சாட்டப்பட்ட படையினர், உண்மை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் முன் குற்றங்களை ஒப்புக்கொள்ளலாம் - என்று வெளி விவகார அமைச்சர் சொல்லி முடிப்பதற்குள்,. அப்படி ஒப்புக்கொள்பவர்களுக்கு மன்னிப்பு வழங்கும்படி, மதத் தலைவர்களை உள்ளடக்கிய, கருணை காட்டும் குழு பரிந்துரை செய்யுமென்று செய்தி வருகிறது.....

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை, மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களை ஆவணப்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்த மக்களிடையே, நிச்சயமாகத் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டியது அவசியம்.

ஆனால், அரசு அதைப் பற்றிக் கவலைப்படவேயில்லை. இப்படியொரு நிலையில், இந்த விசாரணை நடத்தப்பட இருப்பது அவர்களுக்கு நீதி வழங்குவதற்காக இல்லாமல் வேறெதற்காக....

(துணிவான நடவடிக்கைகள் இன்றி) நல்லிணக்கம் குறித்துப் பேசுவது அர்த்தமற்றது. நாடு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே, தமிழ் - சிங்களச் சமூகங்களுக்கு இடையில் கசப்புணர்வும் நம்பிக்கையின்மையும் துவேஷமும் நீடிக்கிறது....

பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி, மேல்தட்டுப் பிரிவினரின் சுயநலம், மேனாட்டு மனோபாவத்துடன் இருக்கிற அரசியல் தலைவர்கள், மகாவம்ச மனநிலை, 'சிங்களம் மட்டும்' சட்டம்,

இந்தியா மற்றும் அமெரிக்காவின் தலையீடு என்று அதற்கான காரணங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.... ஆனால், அதன் கொடுமையான விளைவுகள் கண்ணெதிரில் தெரிகின்றன....

படுகொலைகள், காணாமல் போதல்கள், உடல் ஊனம், இழப்புகள் - என்று சகலவிதங்களிலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை, அந்த மக்களைப் பற்றித்தான் குறிப்பிடுகிறது.

இலங்கையில் நல்லாட்சி அமைவது குறித்தோ, இலங்கையின் இமேஜை மீளக்கட்டுவது குறித்தோ, வெளிநாட்டு உறவுகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தோ அது பேசவில்லை. அது, மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்கிறது.... அதை எப்படி மறுக்க முடியும்..."

ஜெனிவாவில் சர்வதேசத் தோல் போர்த்தியபடி உலாவருகிற மகாவம்ச நரிகள், கொழும்பில் வந்து இறங்கியவுடன் சிங்களத்தின் ஒரிஜினல் தோலுடன் நடமாடுவதை இப்படியெல்லாம் தோலுரித்திருக்கிறார் ஹரிணி.

'பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள்.... அவர்களுக்குத்தான் நீதி தேவை' - இதுதான் ஹரிணி எழுதியிருப்பதன் மையப்புள்ளி. பௌத்த சிங்கள இலங்கையோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதை விட, குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதுதான் முக்கியம் என்று வெளிப்படையாகவே அறிவிக்கிறது.

இப்படியெல்லாம் அறிவிக்கிறீர்களே, உங்களுக்கு அறிவிருக்கிறதா - என்று கேட்காமல் கேட்டிருக்கிறார் ஹரிணி.

ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை மற்றும் அமெரிக்கத் தீர்மானத்துக்குப் பிறகு துணிவுடன் பேசியிருக்கிற முதல் சிங்களச் சகோதரி, ஹரிணி தான். அதற்காக அவரைப் பாராட்டியே ஆகவேண்டும்.

ஹரிணியைப் பாராட்டுபவர்களுக்கு இடையே, அபஸ்வரம் மாதிரி ஒலிக்கிறது ஒரு குரல். 'மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கையை எப்படி நம்புகிறாய்... அது ஒருதலைப் பட்சமானது...

இருந்த இடத்திலிருந்தே இட்டுக்கட்டித் தயாரிக்கப்பட்டது... விசாரணை நடத்தியவர்கள் இலங்கைக்கு வரவேயில்லை... நேரில் எவரையும் விசாரிக்கவில்லை.... இது தெரியுமா உனக்கு' என்று கேட்கிறது அது.

மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதித்தால் - 'நடந்தது போரல்ல, திட்டமிட்ட இனப்படுகொலை' என்பது அம்பலமாகிவிடும் என்கிற அச்சத்தால், அந்தக் குழுவை அனுமதிக்க மறுத்தது யார்?

அந்தக் குழுவை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கவே மாட்டோம் - என்று ஒற்றைக்காலில் நின்றவர்களின் கைத்தடிகள் இப்போது பிளேட்டைத் திருப்பிப் போட்டுக் கூசாமல் பேசுவது ஹரிணிக்கு வியப்பளித்திருக்காது.

அன்று அந்த விசாரணைக் குழுவை அனுமதிக்கவே முடியாதென்று முரண்டுபிடித்தவர்கள் யாரோ, அவர்கள்தான் இன்று 'வெளிநாட்டு நீதிபதிகளையெல்லாம் அனுமதிக்கவே முடியாது' என்று முரண்டு பிடிக்கிறார்கள்.

ஹரிணியின் மனம் திறந்த அபிப்பிராயத்தால் நெகிழ்ந்துபோன சிங்கள வாசகர் ஒருவர், குற்றமிழைத்த அந்த இராணுவ மிருகங்களை எந்த சமூகத்திலும் நடமாட விடக்கூடாது என்று கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

"வடகிழக்கில் வெறியாட்டம் ஆடிய அந்த இராணுவப் பொறுக்கிகளை, வி.வி.ஐ.பி.பாதுகாப்பு என்கிற பெயரில் கொழும்புக்கு அழைத்துவருவது ஆபத்தானது.

இறந்த பெண்களின் உடல்களைக் கூட அந்த மிருகங்கள் சிறுமைப்படுத்தியதை விடியோவில் பார்த்து அதிர்ந்துபோனவன் நான். அந்த மிருகங்களை எப்படி நமது சமூகத்தில் நடமாடவிட முடியும்?

அவர்கள் இங்கே உலா வந்தால், நேற்று வடகிழக்கு மக்களுக்கு என்ன நடந்ததோ அதுதான் நாளை நமக்கும் நடக்கும். எனக்கும் மகள்கள் உள்ளனர். அந்தக் கவலையில் தான் எழுதுகிறேன் இதை!

பச்சைப் படுகொலைகளிலும் பாலியல் வன்முறையிலும் கைதேர்ந்த அராணுவ மிருகங்களுக்கு தண்டனை கொடுக்காமல், மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் அவர் வேதனையுடன்!

முத்தாய்ப்பாக அவர் சொல்வது மிக மிக முக்கியமானது...

"மனித உரிமைகள் ஆணையம், அமெரிக்கத் தீர்மானத்தையெல்லாம் மறந்துவிடுங்கள்.... நாட்டை நாசமாக்கிவிட்ட இவர்களை உடனடியாகத் தூக்கு மேடைக்கு அனுப்புங்கள்" என்கிற அந்த வாசகரின் குமுறலை, மனிதநேயம் கொண்ட ஒவ்வொருவராலும் உணரமுடியும்.

சிங்கள இனத்தில் பிறந்த அந்த மனிதர் அளவுக்குக் கூட பாதிக்கப்பட்ட தமிழினம் ஆத்திரப்படவில்லை.

குற்றவாளியையே நீதிபதி ஆக்கிவிடாதே..
சர்வதேசக் கூண்டில் குற்றவாளிகளை நிறுத்து...
சுயாதீனமான விசாரணைக்கு உட்படுத்து...

இதைத்தான் கேட்கிறது இவ்வளவு காயங்களுக்கு இடையிலும், காலத்தால் பண்பட்ட என் சமூகம்! இப்படியொரு நாகரிகமான சமூகத்தில் பிறந்ததற்காக உண்மையிலேயே நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும்.

ஆத்திரப்படவில்லை நாம்... அவசரப்படவில்லை.....

திருச்செல்வம் சொன்னதைப் போல, 'அமெரிக்கத் தீர்மானத்தையெல்லாம் தாண்டி இலக்கு நோக்கி நகர்கிறோம்.' நாம் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும், அதிரடி அல்ல, பதிலடி! அது சர்வநிச்சயமாக, குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தும். எமது தாயகத்தை எமதாக்கும்....

மாவீரர் கனவை நனவாக்கும்! அதுவரை மகிந்தக்களும் கோதாக்களும் மைத்திரிபாலக்களும் ரணில்களும் ஓடி விளையாடிக் கொண்டுதான் இருப்பார்கள். அதற்கு நாம் பொறுப்பல்ல!

'அடுப்பின் மேலுள்ள பாத்திரத்திலிருக்கும் தண்ணீர் கொதிக்கத் தொடங்குகிற வரை, அதிலிருக்கும் நண்டுகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டுதான் இருக்கும்' என்பது ஒரு சிங்களப் பழமொழி.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum